tamilnadu

img

ஷபிப்பூர், சஹரான்பூர் சம்பவங்களை தலித் மக்கள் மறக்க மாட்டார்கள்..

லக்னோ:

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் தலித் பெண் ஒருவர், அவருடைய கணவரின் கண்ணெதிரேயே கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது. ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் அதனை பதிவிட்டனர்.


இந்த சம்பவத்திற்கு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி மட்டும் அமைதியாகவே இருந்து வந்தார். 

ஆனால், அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, “தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாநில காவல்துறையும் மாநில அரசும் இந்த தவறை தடுக்கத் தவறி விட்டது. மற்ற பல மாநிலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தபோது ஆவேசமாக பேசியவர்கள் இப்போது ஏன் அமைதியாகி விட்டார்கள். அதன் பின்னணி என்ன?” என்று கேள்வி எழுப்பினார். 


ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதும், அதற்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு கொடுப்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு இவ்வாறு பேசியிருந்தார்.இதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தற்போது பதிலளித்துள்ளார்.


அதில், “ஆல்வார் கும்பல் வல்லுறவு சம்பவத்தில், இத்தனை நாட்களாக மோடி அமைதியாக இருந்தார்; இப்போது தேர்தல் வந்ததும் தலித்துக்கள் பற்றி பேசுகிறார்; இதன்மூலம் தனது கட்சிக்கு நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்து, தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்; இது மிகவும் அவமானகரமானது” என்று கூறியுள்ள மாயாவதி, “தலித் மக்களின் வாக்குகளை அள்ளுவதற்காக அவர்கள் மீது மோடி போலியான அன்பை காட்டுகிறார்; ஆனால், ஷபீர்பூர் மற்றும் சஹாரன்பூர் சம்பவங்களை தலித்துகள் மறக்க மாட்டார்கள். அது போல் ரோஹித் வெமுலா மற்றும் உனா சம்பவங்களையும் அவர்கள் மறக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.